15 April 2024

பனித்துளி பசைச்செடிகள் (ஊனுண்ணி தாவரங்கள் 2)

 

பசைச்செடிகள்

உலகிலேயே அதிக எண்ணிக்கையிலான ஊனுண்ணி தாவர இனங்கள் காணப்படும் நாடுகளுள் ஆஸ்திரேலியாவும் ஒன்று என்றும் இதுவரை கண்டறியப்பட்டு வகைப்படுத்தப்பட்டுள்ள 750-க்கும் மேற்பட்ட ஊனுண்ணி தாவரவினங்களுள் 250-க்கும் மேற்பட்டவை ஆஸ்திரேலியாவில் காணப்படுகின்றன என்றும் அவற்றுள் சில வேறெங்கும் காணப்படாத தனித்தன்மை வாய்ந்தவை என்றும் Australian Geographic சஞ்சிகை குறிப்பிடுகிறது.  

“தாவரங்களின் ஊனுண்ணும் செயல், பரிணாமத்தின் கடைசிக் கட்ட முயற்சிதான்” என்கிறார் ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த ஊனுண்ணித் தாவர வல்லுநர் Greg Bourke. 

“ஏனெனில் ஒரு தாவரம் ஒளிச்சேர்க்கைக்குத் தேவையான இலைகளை உருவாக்குவதை விடவும் பூச்சிகளைப் பிடிக்கும் இலைகளை உருவாக்க அதிக ஆற்றலைச் செலவழிக்க வேண்டும். அவ்வளவு கஷ்டப்பட்டு அந்த இலைகளை ஏன் உருவாக்கவேண்டும்? ஏன் பூச்சிகளைப் பிடிக்க வேண்டும்? ஏதாவதொரு வழியில் தங்களுக்குத் தேவையான நைட்ரஜனைப் பெற்றுக்கொள்ளவில்லை என்றால் அத்தாவரங்கள் மடிந்துவிடும்” என்கிறார்.

ஊனுண்ணி தாவரங்கள் பூச்சிகளை ஈர்ப்பதற்குப் பயன்படுத்தும் விதவிதமான உத்திகளுள் நறுமணம் பரப்புதலும் ஒன்று என்று சென்ற பதிவில் குறிப்பிட்டிருந்தேன். மாறாக சில ஊனுண்ணி தாவரங்கள் அழுகிய மாமிச வாடை போன்ற துர்நாற்றத்தைப் பரப்பியும் பூச்சிகளை ஈர்க்கின்றன. மாமிச வாடைக்கு மொய்க்காத ஈக்கள் உண்டா? ஊனுண்ணும் ஆசையோடு வரும் ஈக்களை லபக்கென்று பிடித்து தங்களுக்கு இரையாக்கிக் கொள்கின்றன அந்த ஊனுண்ணி தாவரங்கள்.

நம்மால் நடக்க முடியும், உடலை அசைக்க முடியும். கழுத்தைத் திருப்ப முடியும். கைகளை இயக்க முடியும். இருந்தாலும் நம்மைச் சுற்றி சுற்றிப் பறந்து தொல்லை செய்யும் ஒரு ஈயையோ கொசுவையோ சட்டென்று அடித்துவிட நம்மால் முடிகிறதா? பெரும்பாலும் எப்படியோ நம்மிடமிருந்து தப்பித்துவிடுகிறது. ஆனால் இந்த ஊனுண்ணி தாவரங்கள் தாங்கள் இருந்த இடத்திலேயே இருந்துகொண்டு பூச்சிகளை மிக சாமர்த்தியமாகவும் லாவகமாகவும் பிடிக்கும் திறமையை வியக்காமல் இருக்கமுடியவில்லை.


சார்லஸ் டார்வின் (படம் உதவி- விக்கிபீடியா)

இந்தப் பூமியில் தாவரங்களும் ஊனுண்ணும் என்ற உண்மையை ஆய்வுபூர்வமாக நிரூபித்ததோடு அவற்றின் ஊனுண்ணும் உத்திகளையும் உலகறியச் செய்தவர் ‘பரிணாம உயிரியலின் தந்தை’ என்று போற்றப்படும் சார்லஸ் டார்வின். அதுவரை அத்தாவரங்கள் மீதான கூர் கவனிப்பை வேறு யாரும் பெரிய அளவில் மேற்கொண்டிருக்கவில்லை. டார்வினின் கண்டுபிடிப்பும் கூட ஒரு தற்செயல் கண்டுபிடிப்புதான்.

1860 வாக்கில் ஒரு கோடைகாலம். டார்வின் தன் மனைவியோடு இங்கிலாந்தில் ஒரு கிராமத்துக்கு ஓய்வுக்காகச் சென்றிருந்தார். இயற்கை ஆர்வலரும் ஆராய்ச்சியாளருமான அவர் தினமும் உலவச் செல்லும் புதர்ப்பாதையில் Drosera எனப்படும் செடிகளில் பூச்சிகள் ஏராளமாக ஒட்டிக்கிடப்பதைக் கண்டார். அவருடைய ஆய்வுமனம் விழித்துக்கொண்டது. உடனடியாக சில செடிகளை சேகரித்து ஆய்வினைத் தொடங்கினார். தன்னுடைய ஆய்வு நண்பர்களுக்குத் தகவல் அனுப்பினார். இரவும் பகலும் அவற்றைக் குறித்த ஆராய்ச்சியிலேயே கழித்தார்.

டோர்செரா இனம்

டார்வினின் இடைவிடாத ஆராய்ச்சியைக் கண்ட அவர் மனைவி எம்மா தன்னுடைய தோழிக்கு எழுதிய கடிதத்தில், ‘சார்லஸ் தற்போது ட்ரோசெரா தாவரம் குறித்த ஆராய்ச்சியில் தீவிரமாக ஈடுபட்டிருக்கிறார். எந்நேரமும் பதற்றமும் பரிதவிப்புமாகத் தென்படுகிறார். அதை ஒரு உயிருள்ள ஜீவன் போலவே கருதுகிறார். போகிற போக்கைப் பார்த்தால் அந்தத் தாவரம் ஒரு விலங்கு என்று நிரூபிக்காமல் விடமாட்டார் போலிருக்கிறது’ என்று குறிப்பிட்டுள்ளார்.        

ஊனுண்ணி தாவரங்கள் பற்றிய முதல் புத்தகம்

சுமார் பதினைந்து வருடங்களாக Drosera மற்றும் Dionaea என்ற ஊனுண்ணி தாவரங்களின் இயக்கம் மற்றும் செயல்பாடு குறித்து தாவரவியல் ஆராய்ச்சியாளர்களோடு இணைந்து டார்வின் மேற்கொண்ட தீவிர அவதானிப்புக்கும், பல்வேறு விதமான மாறுபட்ட ஆராய்ச்சிகளுக்கும் பிறகு 1875-ஆம் ஆண்டு பூச்சியுண்ணி தாவரங்கள் (Insectivorous Plants) என்ற புத்தகத்தை வெளியிட்டார். அதில் இடம்பெற்றுள்ள விளக்கப் படங்களை டார்வினும் அவருடைய மகன்கள் ஜார்ஜும் ஃப்ரான்சிஸும் வரைந்துள்ளனர். 

சார்லஸ் டார்வின் புத்தகத்திலிருந்து (1) (படம் உதவி - விக்கிபீடியா)

சார்லஸ் டார்வின் புத்தகத்திலிருந்து (2) (படம் உதவி - விக்கிபீடியா)


டார்வின் தன்னுடைய நூலில் ஆய்வுமுடிவுகளாகக் குறிப்பிட்டிருக்கும் சில அம்சங்கள்:

  • பூச்சியுண்ணி தாவரங்கள் பூச்சியைப் பிடிப்பதற்கு வெவ்வேறு உத்திகளைப் பயன்படுத்துகின்றன.
  • பூச்சியுண்ணி தாவரங்கள் நைட்ரஜன் உள்ள பொருட்களை மட்டுமே பிடிக்கின்றன. நைட்ரஜன் அல்லாத பொருட்களைப் பிடிப்பதில் ஆர்வம் காட்டுவதில்லை.
  • பூச்சியுண்ணி தாவரங்கள் மழைநீர், பெருங்காற்று, மற்ற இலைகளின் உரசல் போன்ற தேவையில்லாத அசைவுகளுக்கு எந்த எதிர்வினையும் ஆற்றுவதில்லை. அதனால் அவற்றின் சக்தி விரயமாகாமல் பாதுகாக்கப்படுகிறது.
  • பூச்சியுண்ணி தாவரங்கள் அமிலநீரைச் சுரந்து பூச்சிகளைச் செரிமானம் பண்ணும் செயல் கிட்டத்தட்ட விலங்குகள் தங்கள் இரையைச் செரிமானம் பண்ணும் செயலுக்கு நிகராக உள்ளது. 

******

டார்வினை ஈர்த்து ஆய்வுக்குள்ளாக்கிய ட்ரோசெரா தாவரத்தின் தன்மை என்னவென்று பார்ப்போமா? இவற்றின் உத்தி கிட்டத்தட்ட நம்முடைய எண்ணெய்த் தாள் உத்தி போன்றதுதான்.

அதென்ன எண்ணெய்த் தாள் உத்தி? எங்களுடைய சிறு வயதில் வீட்டுக்கு வீடு காணக்கூடிய காட்சி அது. குண்டு விளக்கோ குழல் விளக்கோ இரவு நேரத்தில் விளக்கைப் போட்டதுமே விட்டில் பூச்சிகள் எனப்படும் அந்துப்பூச்சிகள் விளக்கை வட்டமிடத் தொடங்கும். கொஞ்ச நேரத்தில் சூடு தாங்காமல் பொத் பொத்தென்று ஆங்காங்கே விழும். விரித்து வைத்து படித்துக்கொண்டிருக்கும் பாடப்புத்தகம், தட்டில் பரிமாறப்பட்டிருக்கும் சாப்பாடு, கொட்டாவி விடத் திறந்த வாய் என எங்கு வேண்டுமானாலும் விழுந்து தொல்லை தரும். அதைத் தவிர்க்க யாரோ கண்டுபிடித்த உத்திதான் எண்ணெய்த் தாள். ஒரு காகிதத்தின் இரு பக்கமும் எண்ணெயைத் தடவி ஏதாவதொரு முனையில் ஓட்டை போட்டு அதில் நூலைக் கோர்த்து விளக்கின் கீழே கட்டித் தொங்க விட்டுவிடுவோம். அந்துப் பூச்சிகள் அந்த எண்ணெய்ப்பசையில் பச்சக் என்று ஒட்டிக்கொள்ளும். கூடுதல் போனசாக கொசுக்களும் ஒட்டிக்கொள்ள, நம்மால் நிம்மதியாக நம் வேலையைப் பார்க்க முடியும்.

அதே உத்தியைப் பயன்படுத்திதான் Sundews எனப்படும் பசைத்தாவரங்கள் பூச்சிகளைப் பிடிக்கின்றன. நிச்சயமாக நம்மைப் பார்த்து அவை கற்றுக்கொண்டிருக்க வாய்ப்பு இல்லை. நாம்தான் அவற்றைப் பார்த்துக் கற்றுக்கொண்டிருக்கவேண்டும். ஆனால் நாம் அவற்றுக்கு Flypaper trap plant என்று பெயர் வைத்துவிட்டோம்.

Drosera tracyi

ட்ரோசெரா இனத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட சிற்றினங்கள் காணப்படுகின்றன. இலைகள் மண்ணுக்குள் இருக்கும் கிழங்கிலிருந்து நேரடியாக வளர்கின்றன. சிலவற்றின் இலைகள் புல் போன்று நீளமாக இருக்கும். சிலவற்றின் இலைகள் திலக வடிவிலும் சிலவற்றின் இலைகள் கரண்டி வடிவிலும் காணப்படும். சில இனத்தில் தாமரையின் இதழ்களைப் போல வட்டமாக அமைந்திருக்கும்.

பசைச்செடி இனம் 1

பசைச்செடி இனம் 2

பசைச்செடி இனம் 3

பசைச்செடி இனம் 4

வடிவங்கள் வேறாக இருந்தாலும் அவற்றுக்குள் இருக்கும் ஒற்றுமை பசையோடு கூடிய உணர்கொம்புகள். இலைகளின் மீது நெருக்கமாக அமைந்திருக்கும் மெல்லிய மயிரிழை போன்ற உணர்கொம்புகளின் நுனியில் கோந்து போன்ற நுண்ணிய பசைத்துளிகள் சுரந்து காணப்படும். காலை நேரத்தில் புல்வெளியில் மின்னும் பனித்துளிகளைப் போல இந்தச் செடியின் பசைத்துளிகளும் மின்னிக்கொண்டிருக்கும். அதனால்தான் இவற்றுக்கு பனித்துளிகள் என்று பொருள்படும் Sundews என்று பெயரிடப்பட்டுள்ளது. 



உணர்கொம்புகளின் முனையில் பசைத் துளிகள்

இந்தப் பசைத்துளிகள் இனிப்புச்சுவை கொண்டவை என்பதால் பூச்சிகள் அவற்றைத் தேடிவரும். அப்போது பசைத்துளிகளில் ஒட்டிக்கொள்ளும். பூச்சிகள் தப்பிக்க முயற்சி செய்யும்போது அக்கம்பக்கத்திலிருக்கும் மற்ற உணர்கொம்புகளும் உதவிக்கு வரும். அதாவது இலையே வளைந்தும் குனிந்தும் பூச்சியை இறுக்கமாகப் பற்றிக்கொள்ளும். எல்லாப் பக்கத்திலிருந்தும் தாக்குதல் நடந்தால் பூச்சியால் என்ன பண்ண முடியும்? தப்பிக்க இயலாமல் நன்றாக சிக்கிக் கொள்ளும். அடுத்து பசைத்துளி இருக்கும் உணர்கொம்புகள் பூச்சியைச் செரிக்கத் தேவையான என்சைம்களைச் சுரக்கும். பூச்சியை முழுவதுமாக செரித்துமுடித்து சத்துக்களை உறிஞ்சி எடுத்த பிறகுதான் உணர்கொம்புகள் மறுபடியும் நிமிர்ந்து பழைய நிலைக்கு வரும். 

 பிடிபட்டுள்ள பூச்சிகளோடு

பசை உத்தியைப் பயன்படுத்தி பூச்சிகளைப் பிடிக்கும் இன்னொரு ஊனுண்ணி தாவரமான butterwort பற்றி அடுத்தப் பதிவில் பார்க்கலாம்.  

தொடரும்... 

31 March 2024

ஜாடிச் செடிகள் (ஊனுண்ணி தாவரங்கள் 1)

 



//உதயசிம்மன் மந்திரவாதி குறிப்பிட்ட அந்தக் காட்டை அடைந்தான். இருள் அடர்ந்த அக்காடு பயங்கர அமைதியுடன் காட்சியளித்தது. உயிரினங்கள் வாழ்வதற்கான அறிகுறி எதுவும் தென்படவில்லை. அவன் முன்னெச்சரிக்கை உணர்வுடன் உடைவாளை உருவிக் கையில் எடுத்துக்கொண்டான். அடிபெருத்த மரங்கள் பெருங்கிளைகளைப் பரப்பி சூரிய ஒளியை உள்ளே வரவிடாது தடுத்துக் கொண்டிருந்தன. பெரிய பெரிய இலைகளுடன் பெயர் தெரியாத பல தாவரங்கள் ஒன்றோடொன்று பின்னிக்கிடந்தன. வாளால் அவற்றை வெட்டித்தள்ளி பாதை உண்டாக்கியபடி முன்னேறினான். ஆங்காங்கே தென்பட்ட எலும்புக்கூடுகளும் அங்கு நிலவிய துர்நாற்றமும் அவனுக்குள் பயத்தை உண்டாக்கின

சட்டென்று ஒரு பெரிய மரக்கிளையொன்று தாழ்ந்து அவன்முன் வந்தது. அவன் சுதாரிக்குமுன்பே யானையின் தும்பிக்கை போல் அவனைச் சுற்றி வளைத்துத் தூக்கியது. ஒரு மலைப்பாம்பு இரையைச் சுற்றி வளைத்து எலும்பை நொறுக்குவது போல மரக்கிளை அவனை இறுக்க ஆரம்பித்தது. தான் காண்பது கனவா நனவா என்று புரியாமல் அவன் தவித்தான். மரக்கிளையின் பிடியிலிருந்து விடுபடுவது அவ்வளவு எளிதாயில்லை

ராட்சஸன் ஒருவன் மர உருவெடுத்து வாழ்ந்துகொண்டிருக்கிறானோ என்ற ஐயம் ஏற்பட்டது. வழியில் கண்ட எலும்புக்கூடுகளுக்கான காரணம் இப்போது புரிந்தது. இனி ஒரு விநாடி தாமதித்தாலும் தன் உயிர் தன்னுடையதல்ல என்று உணர்ந்தவன், முழுபலத்தையும் பிரயோகித்து தன் கையிலிருந்த உடைவாளால் கிளையை ஓங்கி ஒரு போடு போட்டான். மரக்கிளை ஒரே வெட்டில் துண்டாகி கீழே விழுந்தது. அத்துடன் அவனும் கீழே விழுந்து உயிர் தப்பினான்.//

இந்த மாதிரி அம்புலி மாமா கதைகளை நம் சிறுவயதில் எவ்வளவு படித்திருப்போம். எவ்வளவு பயங்கரமான சித்திரத் தொடர்களைப் பார்த்திருப்போம். அவையெல்லாம் உண்மையா பொய்யா என்ற ஆராய்ச்சியிலும் இறங்கியிருப்போம். முடிவில் எல்லாமே பொய், கட்டுக்கதை என்றும், இல்லையில்லை, உண்மைதான், அமேசான் போன்ற காட்டுக்குள் அத்தனையும் சாத்தியம் என்றும் இருவேறு முடிவுகளுக்கு வந்திருப்போம். இரண்டிலுமே உண்மை இருக்கிறது.

மாமிசம் உண்ணும் தாவரங்கள் உலகில் உள்ளன என்பது உண்மை. ஆனால் மனிதர்களை உண்ணக்கூடியவை என்பது பொய். ஊனுண்ணும் தாவரங்கள் எல்லாமே அளவில் மிகவும் சிறியவை. 




புழு, பூச்சிகளையும் அதிகபட்சமாக வௌவால், எலி, தவளை, பறவைகள் போன்ற சிற்றுயிர்களையும் உண்ணும் அளவுக்குச் சிறியவை ஊனுண்ணி தாவரங்கள் யாவும். கதைகளில் சொல்லப்படுவது போல ஒரு மனிதனைத் தின்பதென்பது அசாத்தியம். ஒருவேளை கீழே உள்ள படத்தில் இருப்பது போன்று ராட்சத வடிவில் இருந்தால் மட்டுமே அது சாத்தியம். 


சிட்னியின் தாவரவியல் பூங்காவில் நான் எதிர்பார்க்காத ஒரு தருணத்தில் அனைத்து ஊனுண்ணி தாவரங்களையும் அருகில் பார்த்து ரசிக்கும் அரிய வாய்ப்பு கிடைத்தது. ஆசை தீரப் பார்த்து ரசித்து படம் பிடித்ததோடு அவற்றைக் குறித்த தகவல்களையும் அறிந்து வியந்தேன். அங்கே நான் எடுத்த படங்களையும், நான் அறிந்துகொண்ட தகவல்களையும் இங்கே உங்களோடு பகிர்ந்துகொள்வதில் மகிழ்கிறேன்.

*****

ஊனுண்ணி தாவரங்களும் பிற தாவர இனங்களைப் போலவே முன்னொரு காலத்தில் சைவமாகத்தான் இருந்திருக்கின்றன. எப்போது அசைவமாயின? தேவை ஏற்பட்டபோது. இன்று நேற்றல்ல, பல கோடி ஆண்டுகளுக்கு முன்பே ஏற்பட்ட பரிணாம மாற்றம் இது. மண்ணிலிருந்து உறிஞ்சப்படும் சத்துக்களும், சூரிய ஒளியும், நீரும்தான் தாவர வளர்ச்சிக்கு அடிப்படைத் தேவைகள் என்பதை அறிவோம்.  இலைகளின் வளர்ச்சிக்கு அதிமுக்கியமான நைட்ரஜன் என்னும் கனிமவளம் மண்ணிலிருந்து கிடைக்காமல் போகும் பட்சத்தில் தாவரங்கள் அதற்கான தேடலில் ஈடுபடுகின்றன. தேடலின் முடிவில் மிகவும் புத்திசாலித்தனமாக அவை கண்டறிந்த தீர்வுதான் சிற்றுயிர்களைப் பிடித்து அவற்றின் உடலிலிருந்து சத்துக்களை உறிஞ்சிப் பெற்றுக்கொள்வது.

ஊனுண்ணி என்று எந்த வகையான தாவரங்களைக் குறிப்பிடுகிறோம்? பிரத்தியேகமான உத்திகள் மூலம் இரையைப் பிடிக்கும் அவை, முக்கியமான ஐந்து நிலைகளில் செயல்படுகின்றன.  

  • 1.   ஏதேனுமொரு உத்தியைப் பயன்படுத்தி இரைபிடித்தல்
  • 2.   பிடித்த இரையைக் கொல்லுதல்
  • 3.   கொன்ற இரையைச் செமித்தல்
  • 4.   செமித்த இரையிலிருந்து சத்துக்களை உறிஞ்சுதல்
  • 5.   உறிஞ்சிய சத்துக்களை தன்னுடைய வளர்ச்சிக்குப் பயன்படுத்துதல்

இந்த ஐந்து நிலை செயல்பாடுகளும் ஊனுண்ணி தாவர இனங்களிடம் ஒரே மாதிரியாக இருப்பதில்லை. இரைபிடிப்பதற்கே அவை வெவ்வேறு உத்திகளைக் கையாளுகின்றன.

ஊனுண்ணி விலங்குகளைப் போல புத்திக்கூர்மையுடனும் மிகுந்த சாதுர்யத்துடனும் செயல்படும் ஊனுண்ணி தாவரங்கள் நம்மை வியப்பில் ஆழ்த்துகின்றன. இரைபிடிக்கும் உத்தியைக் கொண்டு அவற்றை ஐந்து பிரிவுகளாகப் பிரிக்கலாம்.

  • 1.   ஜாடிக்குள் வழுக்கி விழச்செய்து பிடிக்கும் வகை
  • 2.   பசையில் ஒட்டவைத்துப் பிடிக்கும் வகை
  • 3.   படக்கென்று மூடிப் பிடிக்கும் வகை
  • 4.   வெற்றிடத்தால் உறிஞ்சி  உள்ளிழுக்கும் வகை
  • 5.  ஒளியால் திசைதிருப்பி ஈர்க்கும் வகை


முதலில் பூச்சிகளை ஜாடிக்குள் வழுக்கிவிழச் செய்து பிடிக்கும் வகையைப் பார்ப்போம்.

ஜாடியின் நிறமும் அதற்குள் சுரக்கும் பூந்தேன் போன்ற இனிப்புத் திரவமும்தான் பூச்சிகளைக் கவர்ந்திழுக்கும் தூண்டில்கள். இன்னும் சில ஜாடிச் செடிகள் பூக்களைப் போல நறுமணம் பரப்பி, பூச்சிகளை தங்கள் வசம் வரவழைக்கின்றன. சில ஜாடிகளின் விளிம்புகள் மெழுகு தடவியது போன்று வழுவழுவென்று இருக்கும். பூச்சிகள் வந்தமர்ந்த உடனேயே வழுக்கிக்கொண்டு உள்ளே விழுந்துவிடும். உள்ளே விழுந்த பூச்சிகள் என்னாகும்? ஜாடிக்குள் சுரந்து தேங்கியிருக்கும் அமில நீரில் கரைந்து செடிக்கு உணவாகிவிடும்.

ஜாடி சரி. மூடி எதற்கு? என்ற சந்தேகம் வரலாம். மழை பெய்தால் மழை நீர் அதிகப்படியாக உள்ளே வந்து அமில நீரின் வீரியத்தைக் குறைத்துவிடக்கூடாது அல்லவா? அதற்கான பாதுகாப்புதான் மூடி. எவ்வளவு சமயோசிதம்!

ஊனுண்ணி தாவரம் என்றதுமே நம் நினைவுக்கு வருவது கதைகள் மற்றும் கார்ட்டூன்கள் மூலமாக நாம் அறிந்த ஜாடிச் செடிதான். ஆங்கிலத்தில் Pitcher plant எனப்படும்  ஜாடிச் செடி வகையில் மூன்று குடும்பங்களும் நூற்றுக்கும் மேற்பட்ட பிரிவுகளும் உள்ளன. 

  1Sarraceniaceae குடும்பம்

இந்தக் குடும்பத்தைச் சேர்ந்த ஜாடிச்செடிகள் பெரும்பாலும் ஊதுகுழல் வடிவில் இருக்கும். இந்த வகை ஜாடிச்செடிகளில் வேர்ப்பகுதியிலிருந்து வெளிவரும் ஒவ்வொரு இலையும் ஒரு ஜாடியாக உருவெடுக்கும்.  


Yellow pitcher plant, Hooded pitcher plant & Crimson pitcher plant

White-topped pitcher plant


 Parrot pitcher plant (கிளியின் அலகு போல் இருப்பதால்)

Purple pitcher plant

வாய்ப்பகுதியில் உள்நோக்கி வளர்ந்த ரோமங்கள்

கீழே இருப்பது கோப்ரா லில்லி எனப்படும் ஊனுண்ணி தாவரம். சராசெனியே குடும்பத்தின் டார்லிங்டோனியா பேரினத்தைச் சேர்ந்தது.  லில்லிக்கும் இதற்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்றாலும் நாகம் படமெடுத்திருப்பதைப் போன்ற அதன் தோற்றத்தால் 'கோப்ரா லில்லி' என்ற பெயரைப் பெற்றுள்ளது. கலிஃபோர்னியாவைத் தாயகமாகக் கொண்டதால் கலிஃபோர்னியா ஜாடிச்செடி என்ற பெயரும் உண்டு. 


Cobra lily

2. Nepenthaceae குடும்பம்

இந்தக் குடும்பத்தைச் சேர்ந்த தொங்கும் ஜாடிச்செடியில் இலைகளின் நுனியில் வளரும் பற்றிழைகளின் முடிவில் கெண்டி வடிவத்தில் மூடியோடு பிரத்தியேகமான ஜாடிகள் உருவாகும். இவை அளவில் பெரியவை என்பதால் பூச்சிகள் மட்டுமல்லாது எலி, தவளை, சிறு பறவைகள் போன்றவற்றை இரையாக்கிக் கொள்ளக்கூடியவை. 

கெண்டி வடிவ ஜாடிகள்

Nepenthes alata

Great pitcher plant (Nepenthes maxima)

குடுவை அல்லது கெண்டி வடிவிலான ஜாடிச் செடிகள்

மெழுகு தடவியது போன்ற வாய்ப்பகுதி

இலைகளின் நுனியில் ஜாடிகள்

இலைகளும் ஜாடிகளும்

உராங்குட்டான் போன்ற குரங்குகள் இந்தக் கெண்டிச்செடியில் தேங்கியிருக்கும் மழைநீரைக் குடிப்பதால் இந்தச் செடிகளுக்கு 'குரங்கின் கோப்பை' அதாவது  Monkey cups என்ற பெயர் இடப்பட்டுள்ளது. ஃபிலிப்பைன்ஸில் இதற்கு 'யூதாஸின் பணப்பை' என்ற பெயர் இடப்பட்டிருக்கும் காரணம் தெரியவில்லை. 

3. Cephalotaceae குடும்பம்

இந்த குடும்பத்தைச் சேர்ந்த ஒரே பேரினமான அல்பேனி ஜாடிச்செடி ஆஸ்திரேலியாவில் மட்டுமே காணப்படுகிறது. அதுவும் மேற்கு ஆஸ்திரேலிய மாநிலத்தில் மட்டுமே காணப்படும் செடியாகும். 

Albany pitcher plant

பொதுவாக ஜாடிச்செடிகளின் மூடிகள் ஜாடியின் விளிம்பில் ஒட்டிக்கொண்டு இருக்கும். அல்பேனி ஜாடிச்செடியிலோ அதன் மூடி ஜாடியின் பின்புறத்தில் இருந்து வளர்ந்திருக்கும். ஜாடியும் உயரமாக இல்லாமல் குள்ளமாக இருக்கும். 

*****

சாதாரண செடிகளைப் போலவே ஜாடிச் செடிகளும் பூக்கும். பூக்கள் காய்ந்து விதைகள் உருவாகும். விதைகளிலிருந்து புதிய செடிகள் முளைக்கும்.



ஊதுகுழல் வடிவ ஜாடிச் செடியின் பூக்கள்

ஜாடிச்செடியின் சிவப்பு நிறப் பூ

ஜாடிச்செடியின் மஞ்சள் நிறப் பூ

ஜாடிச் செடிகள் பற்றிய மேலும் சில சுவாரசியமான தகவல்கள்

  • தென்னமெரிக்காவைச் சேர்ந்த Heliamphora  இனத்தில் ஜாடிகளுக்கு மூடி கிடையாது. அப்படியென்றால் அதிகப்படியான மழைநீர் தேங்கி பூச்சிகளைப் பிடிக்க இயலாமல் போகுமே என்று நினைக்கத் தோன்றும். அதற்கும் அந்தச் செடி ஒரு வழி வைத்திருக்கிறது. அதிகப்படியான மழைநீர் தேங்கினால் அதை வெளியேற்ற ஒரு கழிவுநீர் துவாரமும் ஜாடியில் இருக்கிறது. பிறகென்ன கவலை?  

  • சில ஜாடிச்செடிகள் பூச்சிகளைக் கொல்லாமல் வித்தியாசமான முறையில் ஊட்டச்சத்தைப் பெறுகின்றன. எப்படி தெரியுமா? குறிப்பிட்ட பூச்சியினம் ஜாடி நீருக்குள் முட்டையிடும். அந்த ஜாடி நீரில் வளரும் லார்வாக்களின் கழிவுகளிலிருந்து செடிகள் தங்களுக்கான சத்தைப் பெற்றுக்கொள்ளும். லார்வாக்கள் வளர்ந்து பூச்சிகளாகிப் பறந்துபோகும். பிறகு அவை முட்டையிட ஜாடி நீரைத் தேடிவரும். லார்வாக்கள் உருவாகும். செடி வளரத் தேவையான சத்து கிடைக்கும். பூச்சிகளும் ஊனுண்ணி செடிகளும் ஒன்றை ஒன்று சார்ந்தும் ஒன்றுக்கொன்று உதவியும் வாழும் வாழ்க்கைச் சுழற்சி வியக்கவைக்கிறது அல்லவா?

  • இன்னொரு வகை உண்டு. இந்தோனேஷியாவில் வாழும் Tupaia montana என்ற மலைவாழ் மரமூஞ்சூறு இனம் குறிப்பிட்ட சில ஜாடிச்செடிகளைத் தேடிவந்து கழிவறையாகப் பயன்படுத்துகின்றன. ஆச்சர்யமாக இருக்கிறதா? அந்த மூஞ்சூறுகளை வரவழைக்க செடி செய்யும் தந்திரம் இன்னும் ஆச்சர்யம். ஜாடிச்செடிகளின் மூடியில் அவை இனிப்பான திரவத்தைச் சுரக்கச் செய்கின்றன. வயிறுமுட்ட அவற்றை உண்ணும் மூஞ்சூறுகள் அப்படியே அந்த ஜாடிக்குள் புழுக்கை போட்டுவிட்டுப் போகும். அந்தப் புழுக்கைகளிலிருந்து தேவையான நைட்ரஜனை செடிகள் பெற்றுக்கொள்ளும். ஊனுண்ணி தாவரங்கள் சாதுர்யமானவை என்பது எவ்வளவு அழகாக நிருபணமாகிறது பாருங்கள்.   
*****

(தொடரும்)